இலங்கை
எதிர்வரும் இரு வாரங்கள் வடக்கில் மழை
எதிர்வரும் இரு வாரங்கள் வடக்கில் மழை
வெப்பச்சலனம் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
வெப்பச் சலனம் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை மழைக்குச் சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக, எதிர்வரும் 6ஆம் திகதியளவில் இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கை அண்மித்து வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகித் தாழமுக்கமாக மாற்றமுற்று மேற்கு, வடமேற்குத் திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வங்காளவிரிகுடாவில் மீண்டுமொரு வளிமண்டலமேலடுக்குச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னரே இதனை உறுதிப்படுத்தமுடியும். இதேவேளை, நேற்றையதினம் வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் குறிப்பாக நெடுங்கேணி, மாங்குளம், மடு, செட்டிக்குளம், துணுக்காய், பாண்டியன்குளம், புளியங்குளம், ஓமந்தை, தாண்டிக்குளம், கீரிசுட்டான், முறிகண்டி, ஆனை விழுந்தான், ஒட்டுசுட்டான், தம்பலகாமம், கந்தளாய், வாகரை மற்றும் வெருகல், போன்ற இடங்களில் மிக உயர்வான வெப்பநிலை நிலவிய நிலையில் இன்றையதினமும் மிக உயர்வான வெப்பநிலை தொடரும்- என்றுள்ளது.