பொழுதுபோக்கு
11-வது அறிமுக இயக்குனர்; ஆனால் என்னை ஈர்த்தது இதுதான்: டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்!
11-வது அறிமுக இயக்குனர்; ஆனால் என்னை ஈர்த்தது இதுதான்: டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து மனம் திறந்த சசிகுமார்!
தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்ததற்கான காரணத்தை, நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சினிமா ஊடகவியலாளர் சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலின் போது பல விஷயங்களை அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் சில சமயத்தில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் பெரும் வரவேற்பை பெறும். இதற்கு சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை சிறந்த உதாரணமாக கூறலாம். அப்படத்தை உருவாக்கிய விதம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், பலருக்கு இன்ஸ்பிரேஷனாக சுப்பிரமணியபுரம் திரைப்படம் அமைந்தது. இந்த பெருமைகள் அனைத்தும் அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சசிகுமாரை சாரும்.முதல் படம் என்பது போல் அல்லாமல், ஒரு தேர்ந்த இயக்குநரை போன்று சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை சசிகுமார் கையாண்டிருப்பார். இதன் பின்னர், பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், விமர்சகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தையும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து பல விஷயங்களை சசிகுமார் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.அந்த வகையில், “டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் பணியாற்றிய 11-வது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். அதனால், புதுமுக இயக்குநர்கள் என்ற வேறுபாடு நான் பார்ப்பதில்லை. ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று தீர்மானிக்க அதன் ஸ்க்ரிப்ட் தான் காரணமாக அமைகிறது.மற்றபடி, அவரை ஒரு புதுமுக இயக்குநராகவோ அல்லது அவரால் இந்தப் படத்தை இயக்க முடியுமா என்றோ நான் யோசிக்கவில்லை. கதைக்கான தெளிவு அவரிடம் இருந்த போது, படத்தையும் அவர் சரியாக எடுத்து விடுவார் என்று நான் நம்பினேன். மேலும், ஒரு நபருடன் இணைந்து இரண்டு நாட்கள் பணியாற்றும் போதே, அவர் எப்படி வேலை செய்வார் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.கதை சிறப்பாக இருந்த காரணத்தால், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பலரும் படத்துடன் தங்களை கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது என்று கூறினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. பார்வையாளர்களும் அதனை எதிர்பார்த்தனர்.ஒரு பாசிடிவ்-ஆன கண்ணோட்டத்துடன் படத்தை எடுத்துச் சென்ற விதம் எனக்கு பிடித்திருந்தது. இப்படம், பார்வையாளர்களிடம் இருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்தது” என சசிகுமார் தெரிவித்துள்ளார்.