இலங்கை
புலிகளை ஊக்குவித்தவர்கள் முதலீட்டாளர்கள் ; நாட்டைப் பாதுகாத்தவர்கள் குற்றவாளிகளா? நாமல் கேள்வி
புலிகளை ஊக்குவித்தவர்கள் முதலீட்டாளர்கள் ; நாட்டைப் பாதுகாத்தவர்கள் குற்றவாளிகளா? நாமல் கேள்வி
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க் குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளைத் தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய தமிழ் டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்குக் கொண்டு வந்த படையினரைக் குற்றவாளியாகப் பார்க்கின்றது.
முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்தவர்கள் போர்க் குற்றவாளிகளாகியுள்ளனர்.
விடுதலைப்புலிகளால் செய்ய முடியாமல்போன கலாச்சாரச் சீரழிவைத் தற்போதைய அரசு செய்கின்றது.
அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.