இலங்கை
ரியூஷன் கிணற்றில் மாணவியின் சடலம்; வவுனியாவில் சோகம்!!!
ரியூஷன் கிணற்றில் மாணவியின் சடலம்; வவுனியாவில் சோகம்!!!
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றுக்குள் இருந்து மாணவியொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சிதம்பரநகரைச் சேர்ந்த அருணிகா (வயது-18) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரின் இறப்புக்கான காரணங்கள் தெரியவராத நிலையில், இந்தச் சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது. குறித்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவி, நீண்டநேரமாக வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவரை பெற்றோரும் உறவினர்களும் தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, சைக்கிள் என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், கல்வி நிலையவளாக கிணற்றின் அருகே மாணவியின் பாதணிகளும் காணப்பட்டுள்ளன. கிணறு 40 அடிக்கும் மேற்பட்ட ஆளம் உள்ளது என்பதுடன், கிணற்றுக்குள் அதிகளவான தண்ணீர் நின்றதால், மாணவியின் நிலைதொடர்பில் உறுதியாக எதையும் அறியமுடியாத சூழல் நிலவியுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தகவலறிந்துவந்த இளைஞர்களும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். இதன்போது கிணற்றின் அடிப்பகுதியில் மாணவி மூழ்கியிருப்பது அவதானிக்கப்பட்டு, அவர் உடனடியாக மீட்கப்பட்டார். எனினும், அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.