இலங்கை
தனிக்கட்சி விளையாட்டு இலங்கையில் எடுபடாது; முன்னாள் அமைச்சர் அமரவீர தெரிவிப்பு!
தனிக்கட்சி விளையாட்டு இலங்கையில் எடுபடாது; முன்னாள் அமைச்சர் அமரவீர தெரிவிப்பு!
சில நாடுகளில் உள்ளதைப் போன்று, இலங்கையிலும் தனிக்கட்சி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால், அந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்காது என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கதான் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டார். அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது. அந்த முடிவு தொடர்பில் இன்றும் நாம் பெருமையடைகின்றோம். ரணில் முன்வைத்த சிறப்பான அடிதளத்தால் தான் இந்த அரசாங்கத்தால் பயணிக்கக் கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை தற்போது நிறைவேற்ற முடியாதுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் தான் எதிரணிகளை முடக்கி தமது இருப்பை தக்கவைப்பதற்கு முயற்சிக்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களே அந்தக் கட்சியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அரசாங்கம் செய்யும் தவறுகளை கண்டு நாம் அமைதிகாக்கப் போவதில்லை. ஆட்சியை கவிழ்க்க முற்படவில்லை. ஆனால் தவறு நடந்தால் நிச்சயம் அவற்றைச் சுட்டிக்காட்டுவோம்.
எதிரணிகளை ஒடுக்கி தனிக்கட்சி ஆட்சியை முன்னெடுக்கவே முயற்சி எடுக்கப்படுகின்றது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் அந்த நிலைமையை ஏற்படுத்துவது கடினம் என்றார்.