இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை இரத்துக்கு எதிரான மனுக்கள் விசாரணையில்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை இரத்துக்கு எதிரான மனுக்கள் விசாரணையில்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்வதற்காக அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவைச் சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன்சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
சட்டவரைவின் சில சரத்துக்கள் அரசமைப்பை மீறுகின்றன என்றும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்புக்கும் விடவேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்தச் சட்டவரைவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேரா, சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மகிந்த பத்திரன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உள்ளிட்டோர் 6 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.