இலங்கை
இழந்துவிட்ட உயிர்களைத் தவிர மிகுதி அனைத்தையும் தருவோம்!
இழந்துவிட்ட உயிர்களைத் தவிர மிகுதி அனைத்தையும் தருவோம்!
அமைச்சர் அபயரத்தன தெரிவிப்பு
வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத்தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் எச்.எம்.எச்.அபயரத்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணசபையால் கோரப்படும் நிதி 2026ஆம் ஆண்டுக்குள் விடுவிக்கப்படும். கடந்த காலத்தில் இந்த மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம். இங்கே ஏனைய மத்திய அமைச்சுகளுடன் தொடர்புடைய சில தேவைப்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. அதுதொடர்பில் தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகக் கலந்துரையாடுவதற்கு ஏதுவான ஒழுங்குகள் செய்து தரப்படும். அதே போல நிரந்தர நியமனங்களுக்காக விசேட அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஒழுங்குசெய்யப்படும். புதிய உள்ளூராட்சிமன்றங்களை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றீர்கள். சபைகளின் வருமானத்தில் 20 சதவீதம் சம்பளமாக வழங்கவேண்டிய நிலையில் புதிதாக உருவாக்கப்படும் சபைகளால் அது முடியுமா? அந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அதேநேரம் சபைகளின் தரங்களை உயர்த்துவது. புதிய கட்டடங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடன் சமர்ப்பியுங்கள் – என்றார்.