இலங்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் குறுந்திரைப்படங்கள் திரையிடல்!
யாழ். பல்கலைக்கழகத்தில் குறுந்திரைப்படங்கள் திரையிடல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை பி.ப. 2.30 மணிக்கு திரையிடப்படவுள்ளன.
போர்ச்சூழலில் தனது மகனைப் பாதுகாக்கப் போராடும் ஒரு தந்தையின் பாசப்போராட்டத்தைத் தாங்கி நிற்கும் ‘நான்காம் போர்’, நாட்டின் நிலைமை காரணமாகப் பல ஆண்டுகளாகத் தனது மகளைக் காணாமலிருந்த ஒரு தந்தையின் பரிதவிப்பை வெளிப்படுத்தும் ‘அன்பின் நிழல்’, அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை மையப்படுத்திய ‘லிசா’, கணவன் இன்றி தன் மகளோடு வாழும் ஒரு பெண் எவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறாள் என்பதைச் சொல்லும் ‘கம்பளிப் பூச்சி’, 2019 ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் மதகுரு பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இணக்கத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘ஆஸ் ஏ தேர்ட் பேர்சன்’, ஒரு தாயின் கனவுகளைச் சொல்லும் ‘சப்பாத்து’, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு தாய் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் கூறும் ‘அந்தக் கணம்’, மலையகத்தில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ‘வேட்கை‘, காணாமல் ஆக்கப்பட்ட ஒரு போராளியின் குடும்பம் எதிர்கொள்ளும் அவலங்களின் கதையான ‘கணையாழி’, மனிதர்களின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக அமையும் போது, வெவ்வேறு தேவைகளுடைய இரு மனிதர்கள் ஒன்றாகச் சந்திக்கும் கதையான ‘டிப்ரன்ட்’ ஆகிய குறுந்திரைப்ப உங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பங்கேற்று இக்குறுந்திரைப்படங்களைக் கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.