இலங்கை
அரசியற்தீர்வு விடயத்தில் அக்கறைகாட்ட வேண்டும்!
அரசியற்தீர்வு விடயத்தில் அக்கறைகாட்ட வேண்டும்!
ஜனாதிபதி அநுரகுமாரவிடம் சிவில் செயற்பாட்டார்கள் வலியுறுத்து
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம். வடக்கு, கிழக்கில் அபிவிருத்திக்கு வழங்கும் முக்கியத்துவத்தை அரசியற் தீர்வு விடயத்தில் முன்வைக்கவேண்டும் என்று தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 23ஆம் திகதியுடன் ஒரு வருடமாகின்றது. இதனை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் பெருமளவு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இது நல்லவிடயமாக இருந்தபோதிலும், அபிவிருத்திக்குச் சமாந்தரமாக அரசியல் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும். மைத்திரி – ரணில் கூட்டாட்சி அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குரிய வரைவு மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதிப்படுத்தப்பட்டு வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.
எனினும், அதற்குரிய பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.மாறாக, பொருளாதாரத்தைப் பலப்படுத்திய பின்னரே அரசியலமைப்புப் பணிகள் இடம்பெறும் என்று கூறப்படுகின்றது. இந்தக் கருத்துக்களை ஏற்க முடியாது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கம் முதல் இருவருட ஆட்சிக்குள் செய்துவிட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அதற்குரிய சாத்தியப்பாடுகள் குறையத் தொடங்கிவிடும்.
அத்துடன், காணி விடுவிப்பு, முகாம்கள் அகற்றம், பாதுகாப்பு வலயங்கள் நீக்கம் போன்ற நகர்வுகள் இடம்பெற்றாலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் அரசாங்கம் நம்பகரமான செயற்படவில்லை. எனவே. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.