இலங்கை
தேங்காய் திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!
தேங்காய் திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!
மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி பிரவேசித்து தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அந்த தென்னந்தோப்பில் காவலில் ஈடுபட்டிருந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் இன்று அதிகாலை சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னந்தோப்பில் தேங்காய்களை திருடிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
எவ்வாறாயினும் அவர் காயத்துடன் 500 மீற்றர் வரையான தூரம் ஓடி கொஹோலன்வல பிரதான வீதியில் வீழ்ந்த நிலையில், அவரை அங்கிருந்த மக்கள் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், அந்த தென்னந்தோப்பில் பலமுறை தேங்காய் திருடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தோப்பின் காவலில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அனுமதியின்றி தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய் திருட முயன்ற மற்றொரு சந்தேகநபரை கைது செய்ய மகாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.