இந்தியா
ஊழலற்ற புதியவர்களைக் கொண்டு புதிய அரசு அமைய பாடுபடுவேன்: பா.ஜ.க.வில் இருந்து விலகிய சாமிநாதன்
ஊழலற்ற புதியவர்களைக் கொண்டு புதிய அரசு அமைய பாடுபடுவேன்: பா.ஜ.க.வில் இருந்து விலகிய சாமிநாதன்
புதுச்சேரி பாஜக தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ சாமிநாதன் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2023 செப்டம்பரில் அவர் மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து எம்பி செல்வகணபதி மாநிலத்தலைவராக அப்போது நியமிக்கப்பட்டவுடன் சாமிநாதன் கட்சி செயல்பாட்டை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் சாமிநாதன் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக்கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன், ஊழலற்ற நேர்மையான புதியவர்களைக் கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி