இலங்கை
உலக சிறுவர் தினத்தன்று யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனவீர்ப்பு போராட்டம்!
உலக சிறுவர் தினத்தன்று யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனவீர்ப்பு போராட்டம்!
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதி கோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றையதினம் செம்மணியில் இடம்பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இன்று உலக சிறுவர் தினமாக உள்ள போதிலும் இது எமக்கு துக்கதினம் எனவும் தெரிவித்து, காணமல் ஆக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக நீதி வேண்டும் எனவும், செம்மணி மனித புதைகுழிக்குள் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.