இலங்கை

திருகோணமலையில் சிறுமியை சீரழித்தவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு

Published

on

திருகோணமலையில் சிறுமியை சீரழித்தவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு

   திருகோணமலை – சேருநுவர பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (2) திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.

இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர – தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டது.

Advertisement

வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார்.

வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version