இலங்கை
சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை
சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை
உடற்கூறாய்வில் திடுக்கிடும் தகவல்
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப் பட்ட நிலையில், அந்தப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது -36) என்ற பெண்ணே நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அந்தப்பெண் கல் அல்லது அது போன்ற பொருளால் தலையில் பலமாகக் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது முகத்தில் எரியக்கூடிய திரவமொன்று ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் வீட்டைவிட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றுள்ளார். எனினும், சடலத்தில் நகைகள் காணப்படவில்லை. அவர் வீட்டை விட்டு புறப்பட்டபோது, சிலருடன் இணைந்து வவுனியாவுக்குச் செல்வதாகக் கணவரிடம் கூறியுள்ளார். எனினும், தனது கணவரிடம் குறிப்பிட்டுக் கூறியவர்களுடன் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.