இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக செம்மணி அகழ்வு மீண்டும் தாமதம்;
சீரற்ற காலநிலை காரணமாக செம்மணி அகழ்வு மீண்டும் தாமதம்;
மூன்றாம்கட்ட அகழ்வுக்கு ரூ.19 மில்லியன்!
அரியாலை -செம்மணி மனிதப்புதைகுழி மீதான மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள், சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை நவம்பர் மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. இதுவரை 240 என்புத் தொகுதிகள் அவதானிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 239 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பட்ஜெட் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றன. இதன் போது, மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 19 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, நீதிவான் லெனின்குமார், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் செம்மணிப் புதைகுழிப் பகுதிக்குக்களப்பயணம் மேற்கொண்டனர்.
கடந்த சில நாள்களாகப்பெய்துவரும் கன மழை காரணமாக, அந்தப் பகுதியில் நீர்தேங்கி நிற்பதால் அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், வழக்கு நவம்பர் மாதம் 3ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.