இலங்கை
வெற்றிவாகை சூடியது இலங்கை மகளிர் அணி
வெற்றிவாகை சூடியது இலங்கை மகளிர் அணி
மகளிருக்கான ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் இன்று (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா 85 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
அணித் தலைவி சமரி அத்தபத்து 46 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் சொர்னா எக்டேர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
203 என்ற வெற்றியிலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி பதிலுக்கு துடுப்பாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து கடை ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனையை பதிவு செய்ததுடன் இலங்கையை வெற்றிக்கும் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.