பொழுதுபோக்கு
பெண் உரிமை, ஆணவக்கொலை… ‘இங்கு நிறைய பெரியவர்கள் இருக்கிறார்கள்’: பெரியாரை மறைமுகமாக குறிப்பிட்ட ‘டியூட்’ இயக்குநர்
பெண் உரிமை, ஆணவக்கொலை… ‘இங்கு நிறைய பெரியவர்கள் இருக்கிறார்கள்’: பெரியாரை மறைமுகமாக குறிப்பிட்ட ‘டியூட்’ இயக்குநர்
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் பிரதீப் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கியிருந்தார்.ஒரு படத்தை இயக்கி அடுத்த படத்தில் நடிகராக அறிமுகமாகி அந்த இரண்டு படங்களையும் மெகா ஹிட்டாக்குவது என்பது குறைவானவர்களுக்கே சாத்தியமான ஒரு சாதனை. இதுவரை எந்தக் கோலிவுட் ஹீரோவுக்கும் இது சாத்தியமாகாத ஒன்றாக இருந்த நிலையில், பிரதீப் அதனை எளிதாக கடந்துவிட்டார். ‘லவ் டுடே’ படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் அடுத்த நடித்த ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து, தற்போது இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய் அபயங்கர் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வெளியான ஐந்து நாட்களில் ‘டியூட்’ திரைப்படம் ரூ.95 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “டியூட் திரைப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு அதன் வசூலே உதாரணம். எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சார், நவீன் சாரின் ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்கு இணை அவர்கள்தான். அனில் சாரின் ஆதரவுக்கும் நன்றி. மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப்.சில விஷயங்களை தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் ஒரு டயலாக் இருக்கும். உங்கள் ஆணவத்திற்கு கொலை பண்ணுவீங்களா. அப்படீன்னா நீங்க போய் சாவுங்க என்ற டயலாக். அது முதலில் இல்லை. படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை சம்பவம் குறித்து பார்த்தோம். ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதற்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட டயலாக் தான் அது.ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்ததெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்’ பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. இந்த படம் விவாதத்தை உருவாக்கி இருப்பதாக சிலர் பேசுகிறார்கள்.ஆனால் இது தமிழ்நாடு இங்கு நிறைய பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த பெரியவரும் இருந்திருக்கிறார்” எனப் பெரியாரை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.