தொழில்நுட்பம்
விண்வெளியின் சூப்பர் ஹீரோ… பூமி உருவாகும் முன் சூரியனிடம் இருந்து காத்த வியாழன் – புதிய ஆய்வு!
விண்வெளியின் சூப்பர் ஹீரோ… பூமி உருவாகும் முன் சூரியனிடம் இருந்து காத்த வியாழன் – புதிய ஆய்வு!
சூரியக் குடும்பத்தில் வியாழன் (Jupiter) வெறுமனே பெரிய கிரகம் மட்டுமல்ல. நமது பூமி இந்தப் பிரபஞ்சத்தில் பிறப்பதற்கு முன்பே அதற்கு உதவிய விண்வெளிச் சூப்பர் ஹீரோ. ஆம்! ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன.சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவாகிக் கொண்டிருந்த ஆரம்ப கட்டத்தில், வியாழன் மிக வேகமாகப் பருத்தது. கணிதப் பூதம் போல் அதன் அசுரத்தனமான வளர்ச்சி, உட்புறச் சூரியக் குடும்பத்தை (Inner Solar System) நோக்கிப் பாய்ந்து வந்த வாயு மற்றும் தூசியின் பிரம்மாண்ட ஓட்டத்தை அப்படியே தடுத்து நிறுத்தியது.இந்த வாயு மற்றும் தூசுக் கூட்டத்தில் இருந்துதான் பின்னாளில் நாம் வாழும் பூமி, அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற பாறைக் கிரகங்கள் உருவாக வேண்டும். ஆனால், இந்த மூலப்பொருட்கள் அனைத்தும் சூரியனின் தீ நாக்கிற்குள் இழுக்கப்பட்டு எரிந்து போயிருக்க வாய்ப்பிருந்தது. சரியாக அந்த நேரத்தில், வியாழன் தன் ஈர்ப்புச் சுவரை எழுப்பி, அந்தப் பொருட்களைச் சூரியனிடம் இருந்து காத்து, பூமி உருவாக வழி வகுத்தது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஆய்வின் இணை-தலைவர் ஆண்ட்ரே இசிடோரோ கூற்றுப்படி, “வியாழன் வெறும் மிகப்பெரிய கிரகமாக மாறவில்லை. அது முழு உட்புறச் சூரியக் குடும்பத்திற்கான கட்டிடக்கலையை அமைத்துக் கொடுத்தது. அது இல்லாவிட்டால், இன்று நாம் பார்க்கும் பூமி தோன்றியிருக்கவே முடியாது” என்றார்.விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி வியாழனின் இந்தச் செயல்பாடு எப்படி நடந்தது என்று பார்த்தபோது சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. வியாழனின் பிரம்மாண்ட ஈர்ப்பு விசை, சூரியனைச் சுற்றியிருந்த வாயு மற்றும் தூசுக் கோளத்தில் (disk) பெரும் அலைகளை உருவாக்கியது. இந்தக் குறுக்கீடு, அங்கே வந்த மூலப்பொருட்களை அப்படியே குழப்பி, ஒரு “விண்வெளிப் போக்குவரத்து நெரிசலை” (Cosmic Traffic Jams) ஏற்படுத்தியது. வியாழன் தொடர்ந்து வளர்ந்தபோது, அந்தக் கோளத்தில் பெரிய இடைவெளியைத் திறந்து, சூரியக் குடும்பத்தை ‘உட்புற மண்டலம்’ மற்றும் ‘வெளிப்புற மண்டலம்’ என இரண்டாகப் பிரித்தது. பொருட்கள் சுதந்திரமாகப் பாய்வதை இது நிரந்தரமாகத் தடுத்தது.ரைஸ் பல்கலைக்கழக மாணவர் பைபவ் ஸ்ரீவஸ்தவா கூறுவது போல, இந்த மாதிரியானது விண்கற்களில் காணப்படும் தனித்துவமான இரட்டை ‘ஐசோடோபிக் கைரேகைகள்’ ஏன் தோன்றின என்பதையும், கிரகங்கள் உருவாகும் முறையையும் முதன்முறையாக ஒத்துப் போக வைத்துள்ளது. இந்த ஆய்வு, விஞ்ஞானிகளுக்குப் பல ஆண்டுகளாக இருந்த மர்ம முடிச்சையும் அவிழ்த்துள்ளது. சூரியக் குடும்பத்தின் முதல் திடப்பொருட்கள் தோன்றிய பிறகு, சில விண்கற்கள் மட்டும் ஏன் 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகள் தாமதமாக உருவாயின?உட்புறச் சூரியக் குடும்பத்தில் பொருட்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம், வியாழன் இந்த தாமதமான பிறப்புக்குத் தேவையான தனித்துவமான சூழலை உருவாக்கியது. இந்தத் தாமதமாகப் பிறந்த விண்கற்கள்தான் இன்றுவரை பூமியில் வந்து விழும் “காண்ட்ரைடிக் விண்கற்கள்” (Chondritic Meteorites) ஆகும்!மொத்தத்தில், வியாழன் வெறும் அழகுக்காக அங்கே இல்லை. அது ஒரு மாபெரும் பாதுகாவலன். அது ஏற்படுத்திய விண்வெளிப் போக்குவரத்து நெரிசல் மற்றும் மண்டலப் பிரிப்பு இல்லையென்றால், இன்று நாம் இங்கு இருந்திருக்கவே மாட்டோம்! இதுதான் விண்வெளியின் அற்புதமான உண்மை.