இலங்கை
ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் மீது தாக்குதல்; விசாரணையை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் அதிகாரிகள்!
ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் மீது தாக்குதல்; விசாரணையை முன்னெடுத்த இலஞ்ச ஊழல் அதிகாரிகள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் மோசடிகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பல முறை புகார் அளித்த ஆ.செந்தூரன் என்பவர், உயிர்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமீபத்தில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் மோசடிகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பல முறை புகார் அளித்துள்ளேன். இதன் விளைவாக, இரண்டு வழக்குகள் ஆணைக்குழுவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் அரசு சொத்து மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு மிக முக்கியமானது என்றார்.
“கடந்த வாரம், இந்த ஊழல் விசாரணைகளுக்கு பழிவாங்கும் நோக்கில், தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் தங்களின் அடிவருடிகளை ஏவி, என்மீது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர்” என்று செந்தூரன் குற்றம் சாட்டுகிறார். இந்தத் தாக்குதல் நடந்த அன்றே, அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி மூலம் இது தொடர்பில் முறைப்பாடு அளித்தேன் என்றும் தெரிவித்தார். இந்த விவரத்தை அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரிற்கு தெரிவித்த பின்னர், செந்தூரனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவரைப் பாதுகாக்கும் நோக்கிலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், செயலாளர் மற்றும் பிற பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அவரை நேற்று சந்தித்தனர்.
இதன் போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவும், அவரிடமிருந்து கூடுதல் ஆவணங்கள் பெறப்படவும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.