இலங்கை
கிண்ணியாவில் மாடுகள் மீது வாள் வெட்டு ; ஈவிரக்கமற்றவர்களின் செயல்
கிண்ணியாவில் மாடுகள் மீது வாள் வெட்டு ; ஈவிரக்கமற்றவர்களின் செயல்
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான உரிமைப் போராட்டத்தின் விளைவாக மாடுகள் தொடர்ச்சியாக வாள் வெட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு சந்தேக நபர்களைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நிலப் பிரச்சினை வன்முறையாக மாறியிருந்த நிலையில், பொலிஸாரின் இந்த நடவடிக்கை கால்நடை உரிமையாளர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி, மேய்ச்சல் தரைப் போராட்டத்தின் உச்சகட்டமாக 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்கானது.
ஆரம்ப முறைப்பாடு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கால்நடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடந்தது.
நேற்றிரவு மேலும் நான்கு மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. அதேவேளை, இரண்டு மாடுகள் காணாமல் போயுள்ளதாக மாட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் முறைப்பாடுகளுக்குப் பின்னர், கிண்ணியா பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் முறைப்பாடு செய்த சில மணிநேரங்களுக்குள், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.