இலங்கை
வவுனியா.பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் ; உறவினர்கள் குற்றச்சாட்டு!
வவுனியா.பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் ; உறவினர்கள் குற்றச்சாட்டு!
வவுனியாப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்தமைக்கு பகிடிவதை தான் காரணம் என்று மாணவனின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மாணவனின் உயிரிழப்பிற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மது விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த மாணவனுக்கு மது கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் குறித்த மாணவனை பிறிதொரு மாணவனின் விடுதியில் மாணவர்கள் கொண்டு சென்று விட்டுள்ளனர். சனிக்கிழமை காலை குறித்த மாணவன் எழுந்திருக்காத நிலையில் ஏனைய மாணவர்கள் குறித்த மாணவனை பூவரசன்குளம் மருத்துவமனைக்கு அனுமதித்த போதும் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவன் உயிரிழந்தபோது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். எவ்வாறாயினும், இந்தத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து விசாரணையின் போது, உயிரிழந்த மாணவனின் சகோதரி தெரிவிக்கையில்,
கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகவும் தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் சகோதரி தெரிவித்துள்ளார்.