இலங்கை
கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் ; 31 சந்தேக நபர்கள் அடையாளம்
கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் ; 31 சந்தேக நபர்கள் அடையாளம்
2022 ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
2022 மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டம் தாக்கப்பட்டபோது, அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும் பொலிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரிப் போராட்டக்காரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், ஆனால் அந்த இடைக்காலத் தடை உத்தரவு தற்போது உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகவும், அதன்படி மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதன் கீழ், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இதன்போது அரச சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பிய பிரதம நீதியரசர், அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்று வினவினார்.
அதற்குப் பதிலளித்த அரச சட்டத்தரணி, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விளக்கமளித்த அரச சட்டத்தரணி, இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சம்பவம் நடந்தபோது பொலிஸ் செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டினர்.
அதற்குப் பதிலளித்த அரச சட்டத்தரணி, சம்பவம் நடந்த இடத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகளும், நீர் பீரங்கி வாகனங்களும் இருந்ததாகவும், ஆனால் அவை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்தக் கடமையைப் புறக்கணித்தமை தொடர்பில் அப்போதைய களத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அப்போது, பிரதிவாதிகளின் ஒருவரான தேசபந்து தென்னக்கோன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம, தனது கட்சிக்காரருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகிவரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.
எனவே, குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை விசாரித்த பின்னர் இந்த மனுக்களைப் பரிசீலிப்பதே பொருத்தமானது என்றும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்மொழிந்தார்
.
இதனைத் தொடர்ந்து, மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பைப் பின்னர் அறிவிப்பதற்காக ஒத்திவைத்தது.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படாததால், அவர்களுக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனுவைத் தொடர வேண்டாம் எனத் தரப்பினர் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.